பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் அடுத்து சு. ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுங்க சாவடி அதிகாரியிடம் தனக்கு ஒரு நாள் விடுமுறை வேண்டும் என்று கேட்டார். ஆனால் அதிகாரிகள் விடுமுறை அளிக்க மறுத்து விட்டனர்.
இதைத்தொடர்ந்து கோபால் ஒருநாள் மட்டும் வேலைக்கு செல்லாமல் விடுப்பு எடுத்துள்ளார். இதன் காரணமாக சுங்க சாவடி அதிகாரிகள் கோபாலை ஐந்து நாட்கள் பணி இடை நீக்கம் செய்தனர்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான கோபால் இரு தினங்களுக்கு முன்பு தனக்குத்தானே உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன், உயிரிழந்த கோபால் மனைவி முனியம்மாவை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோபாலின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார். அதன் பின்னர், மண்டல செயலாளர் கிட்டு, வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், ஏ ஐ டி யு சி மாநிலச் செயலாளர் விஜயகுமார், உள்ளிட்டோர் முனியம்மாள் வீட்டிற்கு சென்று நிதி உதவி அளித்தனர்.