மூணையும் எங்களால் வளர்க்க முடியாது… நீங்களே பார்த்துக்குங்க… ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளை ஜி.ஹெ.,ச்சில் விட்டுச்சென்ற பெற்றோர்: 60 நாளில் மனம் மாறி வராவிட்டால் தத்து கொடுக்க திட்டம்

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகளை பராமரிக்க இயலாத சூழ்நிலையால் மருத்துவமனையில் பெற்றோர் விட்டுச் சென்றனர். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் ஒருவர், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு கடந்த மாதம் 20ம் தேதி நடந்த பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தது. அப்போது, குழந்தைகளுக்கு எடை குறைவாக இருப்பதால், குழந்தைகள் நல மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், குழந்தைகளை பராமரிக்க இயலாத சூழ்நிலை உள்ளதால், நீங்களே பராமரித்துக் கொள்ளுங்கள், எங்களுக்கு இக்குழந்தைகள் வேண்டாம் என மருத்துவர்களிடம் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் பெற்றோரிடம் பேசியுள்ளனர். ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக எங்களால் மூன்று குழந்தைகளையும் வளர்க்க முடியாது என்று பெற்றோர் தெளிவாக தெரிவித்தனர். இதைதொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 3 பெண் குழந்தைகளையும் கடந்த 15 நாட்களாக பராமரித்து வந்தனர். 3 குழந்தைகளும் ஓரளவு எடை கூடிய பிறகு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகளையும் மாவட்ட கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரியிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அப்போது, மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி, குழந்தைகள் நல மருத்துவர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘‘பெற்றோர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக, 3 பெண் குழந்தைகளையும் பராமரிக்க முடியாது என சேலம் அரசு மருத்துவமனையில் விட்டுச் சென்றனர். அரசு மருத்துவமனையில் 15 நாள் பராமரிக்கப்பட்டது. பின்னர், பெற்றோரிடம் பேசியும் விருப்பம் தெரிவிக்காததால், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் 60 நாட்களுக்கு குழந்தைகளை பராமரித்து வருவார்கள். அந்த நேரத்தில், பெற்றோர் மனது மாறி திரும்பி வந்ததால் குழந்தைகள் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும். அப்போதும், பெற்றோர் வராத பட்சத்தில் 3 குழந்தைகளையும் தத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.