சென்னைக்கு 11-ம் தேதி கனமழை எச்சரிக்கை: ஏரிகளின் நீர்மட்டத்தை குறைத்துவரும் நீர்வள ஆதாரத் துறை

சென்னை: வரும் 11-ம் தேதி சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி வேண்டுகோளை ஏற்று சென்னை, புறநகர் ஏரிகளின் நீர்மட்டத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் நீர்வள ஆதாரத் துறை ஈடுபட்டுள்ளது. வங்கக் கடலில் இலங்கையை ஒட்டி நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 9, 10 தேதிகளில் மிதமான மழையும், 11-ம் தேதி கனமழையும் பெய்யும் எனவும் வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு சென்னை,புறநகர் பகுதிகளிலிருந்து வெளியேறிய நீரால் பெரு வெள்ளம் ஏற்பட்ட நிலையில், அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மாநகரப் பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில்உள்ள ஏரிகளின் நீர்மட்டத்தைக் குறைத்து வைக்குமாறு மாநகராட்சி சார்பில் நீர்வள ஆதாரத் துறைக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. குறிப்பாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் மட்டுமல்லாது, மாநகரப் பகுதிக்குள் உள்ள கொரட்டூர், மாதவரம், கொளத்தூர், வேளச்சேரி, ஆதம்பாக்கம் போன்றபெரிய ஏரிகளில் நீர் அளவையும் குறைத்து வைக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை நீர்வள ஆதாரத் துறை மேற்கொண்டு வருவதாகவும் மாநகராட்சி உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நீர்வள ஆதாரத் துறை கட்டுப்பாட்டில் உள்ள புழல் ஏரியில் நேற்று நீர் வரத்து 165 கன அடியாக இருந்த நிலையில் 292 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து 42 கன அடியாக இருந்த நிலையில் 713 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. பூண்டி ஏரியிலிருந்தும் 53 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாநகரத்துக்குள் இருக்கும் ஏரிகளின் நீர்மட்டத்தையும் ஆராய்ந்து, எவ்வளவு நீரை வெளியேற்றலாம் எனப் பொறியாளர்கள் நேரில்ஆய்வு செய்து நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.