சென்னையில் மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில், சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது மஸ்கட்டில் இருந்து வந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகள் இருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தனர். அதற்கு அவர்கள் அதிகாரிகளிடம் முன்னுக்கு பின்னாக பேசியதால் அவர்கள் கொண்டுவந்த உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில், அவர்கள் கொண்டுவந்த டிராலி சூட்கேசில் தங்கத்தை மறைத்து வைத்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி 33 லட்சம் மதிப்புள்ள சுமார் மூன்று கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக பயணிகள் இருவரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், மேற்கொண்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.