சிவசேனா சின்னம் விவகாரம்: உத்தவ் தாக்கரேவுக்கு பின்னடைவு!

சிவசேனா கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதற்கு எதிராக உத்தவ் தாக்கரே அணி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.

மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு போர்க்கொடி தூக்கினார். இதனால் பெரும்பான்மை இல்லை என்பதை உணர்ந்த உத்தவ் தாக்கரே, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக ஆதரவுடன், மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியை பிடித்தார். முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற நிலையில் துணை முதலமைச்சராக தேவேந்திர பட்னவிஸ் பதவியேற்றார். இதை அடுத்து சிவசேனா கட்சிக்கு உரிமைக் கோரி, உத்தவ் தாக்கரே அணி, ஏக்நாத் ஷிண்டே அணி என இரு தரப்பும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டன. இரு தரப்பும் உரிமைக் கோரியதை அடுத்து சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு மேல் முறையீடு செய்தது. இந்நிலையில் இன்று, இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் நருலா, உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே உத்தவ் தாக்கரே அணியில் இருந்து பல நிர்வாகிகள் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவி வருவது உத்தவ் தாக்கரே தரப்பை கலக்கம் அடையச் செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.