மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை அருகே நரசிங்கத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கிழக்கு ஒன்றியத்தின் 10-வது மாநாடு நடைபெற்றது. இதற்கு, ஒன்றியத்தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். இந்த மாநாட்டை சங்கத்தின் மாவட்டத் தலைவர் உமாமகேஸ்வரன் தொடங்கி வைத்து பின்னர், பேசினார்.
இதையடுத்து இந்தக் கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் மச்சராஜா வேலை அறிக்கையையும், ஒன்றிய பொருளாளர் கார்த்திகைசாமி வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.
பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகா செயலாளர் கலைச்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தனசேகரன், சி.ஐ.டி.யு. ஒன்றியச் செயலாளர் மனோகரன் உள்ளிட்டவர்கள் வாழ்த்தி பேசினார்கள். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாண்டியன் இந்த மாநாட்டில் நிறைவுரையாற்றினார்.
இந்தக்கூட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்ற வேண்டும் என்றும், இதற்கு கூலியாக ரூபாய் 600 வழங்க வேண்டும் என்றும், தற்போதுள்ள 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி சட்டக் கூலி ரூபாய் 281 வழங்க வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.