`திருட்டு போன பைக்கை ஓட்டி வந்த போலீஸ்' – தஞ்சாவூர் டி.ஐ.ஜியிடம் புகார் அளித்த விவசாயி

ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல் போன பைக்கினை, ஹெல்மெட் அணியாமல் ஓட்டியதாக கூறி அபராதம் கட்ட வலியுறுத்தி போலீஸிடமிருந்து விருத்தாச்சலத்தை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு வந்த மெசேஜ் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திருட்டு போன பைக் போலீஸ் ஒருவர் பயன்படுத்தி வருவதாக கூறி அந்த விவசாயி தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜியிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டு போன பைக்கை ஓட்டும் போலீஸ்

கடலுார் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள வேட்டைக்குடி பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (40) விவசாயி. இவர் கடந்த 2018ல் டி.வி.எஸ்., அப்பாச்சி ஆர்டிஆர் பைக் வாங்கி ஓட்டி வந்தார். சிவப்பு நிறம் கொண்ட அந்த பைக்கின் பதிவு எண் டி.என். 91, டி. 1143. இந்தநிலையில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி இரவு சாவடி குப்பத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தி விட்டு இரவு அங்கேயே தங்கியுள்ளார். இதையடுத்து மறுநாள் காலை பார்த்த போது அவருடைய பைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வெற்றிவேல் தனது பைக் திருட்டு போனதாக கூறி விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸாரும் வழக்கு பதிவு செய்து ரசீது கொடுத்ததுடன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பைக்

இந்நிலையில், கடந்த மாதம் வெற்றிவேலின் செல்போனுக்கு ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி சென்றதற்காக ரூ.100 அபராதம் கட்ட வேண்டும் என நாகப்பட்டினம் போலீஸிடம் இருந்து வந்த மெசேஜ் வெற்றிவேலுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இதனை தொடர்ந்து வெற்றிவேல், தன் நண்பர்களுடன் சேர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் தனது பைக்கை தேடியுள்ளார்.

அதில். போலீஸ் ஒருவர் தன் பைக்கை பயன்படுத்தி வருவது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து தனது பைக்கை திருடியவர்கள் மீதும் மற்றும் என் பைக்கை பயன்படுத்தி வந்த போலீஸ் மீதும் நடவடிக்கை எடுத்து என் பைக்கையும் மீட்டு தர வேண்டும் என தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி., கயல்விழியிடம் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விவசாயி வெற்றிவேல்

இது குறித்து வெற்றிவேல் கூறியதாவது, “ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல் போன பைக்கினை ஹெல்மெட் அணியாமல் ஓட்டியதாக கூறி அபராதம் செலுத்த வலியுறுத்தி போலீஸிடம் இருந்து மெசேஜ் வந்தது. இதை தொடர்ந்து திருட்டு போன பைக்கினை வாய்மேடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ் சுரேஷ் என்பவர் பயன்படுத்தி வருவது தெரியவந்தது.

போலீஸ் என்பதால் பயந்து போன நான் என் பைக் குறித்து எதுவும் கேட்கவில்லை. இதையடுத்து திருட்டு போன எனது பைக்கை உடனே மீட்டுத்தர வேண்டும். திருடி சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், திருட்டு வாகனத்தை பயன்படுத்திய போலீஸ் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பைக்கை போலீஸ் பயன்படுத்தி வரும் போட்டோ ஆதாரத்துடன் டி.ஐ.ஜியிடம் புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.