குஜராத்தில் முதல் கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவு: பாஜக, காங்., ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு வேட்டை

குஜராத்: குஜராத் மாநிலத்தில் முதல்கட்ட சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது. 182 இடங்களை கொண்ட குஜராத் சட்டமன்றத்துக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் கடைசி நேர பரப்புரை செய்து வருகின்றனர். கால் நூற்றாண்டுக்கும் மேலாக குஜராத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் பாரதிய ஜனதா ஆட்சியை தக்கவைத்து கொள்ள தீவிரம் காட்டி வருகிறது.

இம்முறை அனைத்து தொகுதிகளிலும் பாஜக தனது வேட்பாளர்களை களத்தில் இறக்கியிருக்கிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட முதல் கட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் குஜராத்தில் முகாமிட்டு வாக்குகள் சேகரித்து வருகின்றனர். பஞ்சாப்பில் ஆட்சியை கைப்பற்றிய அதே உற்சாகத்துடன் குஜராத் தேர்தலில் குதித்துள்ள ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்துள்ள இளைஞர்கள் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பழங்குடியினர் அதிகம் உள்ள மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களின் கடைசி நேர சூறாவளி பரப்புரையால் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அனல் பறக்கிறது. இன்று மாலையுடன் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைய இருக்கும் நிலையில் வரும் டிசம்பர் 1-ம் தேதி 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.