முட்புதரில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த பெண்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சீலக்காம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (50). மெக்கானிக்கான இவருக்கு நாகவேணி (46) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். நாகவேணி தினமும் பொள்ளாச்சி-உடுமலை எல்லை பகுதி புதுப்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

வழக்கம் போல் நேற்று காலை மாடுகளை அழைத்து கொண்டு தோட்டத்துக்கு சென்ற நாகவேணி, மாலை கடந்தும் மாடுகளுடன் வீட்டுக்கு வராததால் ராஜேந்திரன் பதற்ற மடைந்தார். இதையடுத்து அவர் தனது உறவினர்களுடன் நாகவேணியை தேடி தோட்டத்து பகுதிக்கு சென்றார். அப்போது வழியில் மாடுகள் மட்டும் வந்து கொண்டிருந்தன. நாகவேணியை காணவில்லை. அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் மற்றும் உறவினர்கள் நாகவேணியை அப்பகுதியில் தீவிரமாக தேடினர்.

அப்போது அங்குள்ள முட்புதரில் நாகவேணி ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்தார். இது குறித்து உடனடியாக கோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் மற்றும் கோமங்கலம் போலீசார் பார்வையிட்டனர். அப்போது நாகவேணியின் தலைப்பகுதி சாக்கு மூட்டையால் கட்டப்பட்டிருந்தது. மேலும் அவரது உடலில் ஆடைகள் இல்லை. செடி, கொடிகளால் மூடப்பட்டிருந்தது.

இதனால் மர்மநபர்கள் மாடுகள் மேய்த்து விட்டு வந்து கொண்டிருந்த நாகவேணியை முட்புதருக்குள் தூக்கி சென்று கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் நாகவேணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நாகவேணி இறந்து கிடந்த பகுதி உடுமலை-பொள்ளாச்சி எல்லை பகுதி என்பதால் கொலை குறித்து யார் விசாரிப்பது என்பது தொடர்பாக போலீசாருக்கு சிக்கல் எழுந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் நாகவேணி இறந்து கிடந்த பகுதி திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பது தெரியவந்தது.

இதையடுத்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சசாங்சாய் உத்தரவின் பேரில் குடிமங்கலம் போலீசார் நாகவேணி கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகவேணியை கொன்ற கும்பல் யார், பலாத்காரம் செய்து கொன்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் இந்த சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.