சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா நடந்துமுடிந்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக அரசு நிறைவேற்றியது. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஏற்கெனவே ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, அவசர சட்டத்தை சட்டமாக்குவதற்கான சட்ட மசோதாவைத்தான் தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தது.
இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கோரி தமிழக அரசு அனுப்பி வைத்திருந்தது. அதற்கு ஆளுநரின் ஒப்புதல் அளிக்காத நிலையில் அது காலாவதியாகியிருந்தது. அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்த ஆளுநர், சட்ட மசோதாவுக்கு ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தமிழக அரசு தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தது.
அவசர சட்டத்தில் இடம்பெற்றிருந்த அதே அம்சங்கள்தான், சட்ட மசோதாவிலும் இடம்பெற்றிருந்தது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அதுதொடர்பாக தமிழக அரசிடம் பல்வேறு விளக்கங்களைக் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். தமிழக அரசும் 24 மணி நேரத்திற்குள்ளாக விரிவான விளக்கம் அளித்திருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் துறையின் செயலாளர்கள் உள்ளிட்டோர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினர். அப்போது, ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.