பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுமி பலி: பீகாரில் பயங்கரம்

நாளந்தா: பீகாரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுமி தலையில் குண்டு பாய்ந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் தீப்நகர் அடுத்த கஞ்சபர் கிராமத்தை சேர்ந்த முன்னா யாதவ் என்பவரின் 12 வயது மகள் துசி குமாரிக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அன்றிரவு நடன நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால் உறவினர்கள், நண்பர்கள் என நூற்றுக் கணக்கானோர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது இளைஞர்கள் சிலர் தங்களது கையில் இருந்த நாட்டு துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டனர். அப்போது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த சிறுமி துசி குமாரியின் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு சதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். பிறந்த நாள் கொண்டாட்டம் கொலையில் முடிந்தது, உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தீப்நகர் போலீசார், அடையாளம் தெரியாத சிலர் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளார். வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுமி இறந்ததாக போலீசில் புகார் அளிக்குமாறு, சிறுமியின் தந்தைக்கு உறவினர்கள் அழுத்தம் கொடுத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.கே.ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்ற இடம் மிகவும் குறுகலாக இருந்தது.

விழாவில் பங்கேற்ற யாரோ ஒருவர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அப்போது மாடியில் இருந்த சிறுமியின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் பலியாகி உள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின், சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.