ஜி-20 ஷெர்பா கூட்டம்: பாரம்பரிய உடைகளை தேர்வு செய்து அணிந்து, மகிழ்ந்த வெளிநாட்டு குழு

உதய்ப்பூர்,

இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த நவம்பர் மாதம் 15 மற்றும் 16 ஆகிய 2 நாட்களில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் சீனா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட ஜி-20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஆசிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

2-வது நாள் விழாவில், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவிடம் இருந்து, ஜி-20 தலைமையை அதிகாரப்பூர்வ முறையில் பிரதமர் மோடி பெற்று கொண்டார்.

இதன் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஜி-20 தலைமையை இந்தியா ஏற்று நடத்துவது என்பது ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விசயம். இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி-20 கூட்டங்களை நாங்கள் நடத்துவோம் என கூறினார்.

இதன்படி, இந்தியாவுக்கான ஜி-20 மாநாட்டின் ஓராண்டுக்கான தலைமைத்துவம் கடந்த 1-ந்தேதி முதல் துவங்கியது. இதனையொட்டி, உலக அரசியலில் மிக சவாலான தருணத்தில் ஜி-20 தலைமையை இந்தியா ஏற்றுள்ளது என்று மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் அது தொடர்புடைய கூட்டமொன்றில் பேசும்போது கூறினார்.

ஜி-20 தலைமையை இந்திய ஏற்ற நிலையில், ஜி-20 ஷெர்பா கூட்டம் முதன்முறையாக ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரில் நேற்று தொடங்கியது.

4 நாட்கள் நடைபெறும் இந்த ஜி-20 ஷெர்பா கூட்டத்தில் பங்கேற்க, ஜி-20 நாடுகள் மற்றும் மற்றும் சர்வதேச அமைப்புகளை சேர்ந்த ஷெர்பா குழுக்கள் விருந்தினர்களாக வருகை தந்துள்ளனர். இதற்காக, உதய்ப்பூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுபோன்று 40-க்கும் மேற்பட்ட ஷெர்பா குழுக்கள் வருகை தந்துள்ளன. அவர்களை இந்திய ஜி-20 ஷெர்பா குழுவின் தலைவர் அமிதாப் கந்த் முறைப்படி வரவேற்றார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், விருந்தினர்களை அன்புடன் வரவேற்பது மற்றும் வரலாற்று பேரழகை கொண்டது என்ற வகையில் ராஜஸ்தான் மாநிலம் உலக புகழ் பெற்றது.

ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரில் இருந்து இந்தியாவின் ஜி-20 தலைமையை துவங்குவது என்பது, விருந்தினர்களை கடவுளாக வரவேற்கும் நமது இந்திய பாரம்பரிய நடைமுறையை வெளிப்படுத்தும் அடையாளத்தின் தொடக்கம் ஆகும் என பதிவிட்டார்.

இதனை தொடர்ந்து, ஜி-20 ஷெர்பாக்கள் பங்கேற்ற முதல் கூட்டம் இன்று உதய்ப்பூரில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த வெளிநாட்டு குழுக்களை சேர்ந்தவர்கள், தங்களுக்காக தயாராக வைத்திருந்த ராஜஸ்தானின் பாரம்பரிய உடைகளான மேலங்கிகள், தலைப்பாகைகள் உள்ளிட்டவற்றை தேர்வு செய்து அணிந்து கொண்டனர்.

இதன்பின், ஜி-20 மாநாட்டுக்கான இந்திய ஒருங்கிணைப்பாளர் ஹர்ச வர்தன் ஷிரிங்கலா செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்திய தலைமைத்துவத்தின் விரிவான முன்னுரிமைகளை இந்த முதல் கூட்டம் கொண்டிருந்தது.

இந்த கூட்டத்திற்கு வந்திருந்த வெளிநாடடு குழுவினர், நமது நாட்டின் தனித்துவம் வாய்ந்த மற்றும் பாரம்பரிய உடைகளை மகிழ்வுடன் ஏற்று அணிந்து கொண்டனர் என கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.