இயக்குநராகவும் நடிகராகவும் `சுப்ரமணியபுரம்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி பல திரைப்படங்களை இயக்கியும், நடித்தும் வருபவர் சசிகுமார். இயக்குநராக பல சிறந்த திரைப்படங்கள் இயக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இயங்கிவந்த இவர், சமீபகாலமாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு, அவரின் கடன் சுமைகள் ஒரு பெரும்காரணம்.

இது பற்றி ‘ஆனந்த விகடன்’னுடனான பேட்டியின் போது பகிர்ந்து கொண்ட சசிகுமார், “அதிலிருந்து விடுபடத்தான் இத்தனை வருஷமா ஓடிக்கிட்டு இருந்தேன்; வட்டியும் முதலுமா வாங்குன கடனைத் திருப்பிக் கொடுத்துட்டேன். அடகு வச்ச நகையைத் திருப்புற மாதிரி, அவமானங்களையும் இழப்புகளையும் சரி பண்ணிட வாய்ப்பிருக்கா என்ன?” என்று மனவலியுடன் பேசினார்.
இது பற்றி விரிவாகப் பேசிய அவர், “பணம் எல்லாமே பேப்பர் டு பேப்பரா மாறிடும். கையெழுத்து போடுறது மட்டும்தான் நம்ம தலையெழுத்து. கையில காசைப் பார்த்ததே கிடையாது. உடம்பு சரியில்லாமல் இருந்தப்பகூட ஷூட்டிங் போயிருக்கேன். நம்மளால ஷூட்டிங் தடைபடக் கூடாதுன்னு நினைப்பேன்.

வீட்டுக்கு எதையும் எடுத்துட்டுப் போகாமல், உழைச்சது கைக்கு வராமல்… அதெல்லாம் பெரிய வேதனை. பணத்தை மதிக்காமல் படத்தை மாத்திரம் பார்த்துச் செய்துகிட்டிருந்தேன். அதனால, பணத்துக்கு என் மேல கோபம் வந்துடுச்சு போல… ‘என்னை மதிக்கலையே, பாரு உன்னை என்ன பன்றேன்’னு பரமனுக்கு பயத்தைக் காட்டின மாதிரி எனக்குக் காட்டி விட்டுடுச்சு. இப்ப பணத்தோட அருமையும், படத்தோட அருமையும் சேர்ந்து தெரியுது. வட்டியும் முதலுமா வாங்குன கடனைத் திருப்பிக் கொடுத்துட்டேன். அடகு வச்ச நகையைத் திருப்புற மாதிரி, அவமானங்களையும் இழப்புகளையும் சரி பண்ணிட வாய்ப்பிருக்கா என்ன?” என்றார்.