
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஜங்கலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஹேமந்தகுமார். இவருக்கும் பூதலப்பட்டு மண்டலம், ஜெட்டிப்பள்ளி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஹேமந்தகுமாரின் உறவினர்கள் 30 பேர் இரவு 9 மணி அளவில் ஒரு டிராக்டரில் ஜெட்டிப்பள்ளி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

டிராக்டரை சுரேந்திர ரெட்டி (52) என்பவர் ஓட்டி வந்தார். லட்சுமணய்யா கிராமம் இறக்கத்தில் வந்தபோது டீசலை சேமிக்கும் நோக்கத்தில் டிரைவர் டிராக்டர் என்ஜினை அணைத்து விட்டார். இறக்கத்தில் டிராக்டர் வேகமாக ஓடியது அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. தாறுமாறாக ஓடிய டிராக்டர் சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதில் டிராக்டரில் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து டிராக்டரின் இடிபாடுகளில் சிக்கி அலறி கூச்சலிட்டனர். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் வெளிச்சம் இல்லாமல் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

போலீஸ் வாகனத்தின் முகப்பு விளக்கை எரிய விட்டு விபத்தில் சிக்கிய 24 பேரை மீட்டு திருப்பதி சிம்ஸ் மருத்துவமனை, சித்தூர் அரசு மருத்துவமனை மற்றும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் டிராக்டர் இடிபாடுகளில் சிக்கிய 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
விபத்தில் பலியானவர்கள் தேஜாஸ்ரீ (வயது 25), அவரது மகள்கள் விணு ஸ்ரீ (3), ஜெசிகா (2), மாப்பிள்ளையின் பெரியம்மா வசந்தம்மா (50), ரெட்டியம்மா (30) மற்றும் டிராக்டர் டிரைவர் சுரேந்தர ரெட்டி. பலியானவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மாப்பிள்ளையின் உறவினர்கள் 6 பேர் பலியானதால் திருமணம் நிறுத்தப்பட்டது. விழாக்கோலம் பூண்டிருந்த வீடு சோகமாக மாறியது.