தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி:
தமிழகம் முழுதும், ‘மாண்டஸ்’ புயலால் சேதமடைந்த மீனவர்களின் படகுகள், வலை, உபகரணங்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. பாதிப்புக்குள்ளான மீனவர்களுக்கு தகுந்த நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்குவார்.
நிவாரணம் வழங்குறதுல கட்சி, மதம் பாகுபாடு பார்க்காம இருக்கணும்!
தெலுங்கானா கவர்னர் தமிழிசை பேட்டி:
முதல்வர் ஸ்டாலினின் கான்வாயில், சென்னை மேயர் பிரியா, விருப்பப்பட்டு தான் தொங்கிச் சென்றாரா என தெரியாததால், இதுகுறித்து கருத்து கூற நான் விரும்பவில்லை. மகாகவி பாரதி பிறந்த மண்ணில், பெண்கள் மதிக்கப்பட வேண்டும்.

‘
ரூட் தல’ போல, பெண் மேயரை கார்ல, ‘புட் போர்டு’ அடிக்க விட்டிருக்காங்க… இதை, திராவிட மாடல் புரட்சியில் சேர்த்திருப்பாங்களோ? தான் வகிச்ச பதவியில இருக்கிறவங்களுக்கு இப்படி ஒரு நிலை உருவானதை, முன்னாள் மேயரான ஸ்டாலின் ஒத்துக்கிறாரோ?
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி, செயலர் ராமையன் அறிக்கை:
புதுக்கோட்டை, ஆலங்குடி, கறம்பக்குடி, அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை பகுதிகளில், அதிகளவு நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்திலேயே அதிகளவில், கடலை அரவை ஆலைகள் ஆலங்குடியில் தான் உள்ளன. புதுக்கோட்டையில், தனியாருக்குச் சாதகமாக, அரசே தரமற்ற விதைக் கடலைகளை விற்பனை செய்கிறது.
தரமற்ற உணவை சமைத்து, ‘அம்மா’ உணவகத்தை மூடுறது… ஒளிபரப்பில் இடையூறு ஏற்படுத்தி, அரசு கேபிள், ‘டிவி’யை முடக்கும் வரிசையில ஒன்று தான், தரமற்ற விதைக் கடலை விற்பனையும்!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
மத்திய அரசு, 6 கோடி ரூபாயில், வாரணாசியில் பாரதியார் நினைவகம் அமைக்க போகிறது. 77 ஆண்டுகள் அமைதியாக இருந்து விட்டு, அவசர அவசரமாக, 18 லட்சம் ரூபாயில் நினைவகம் அமைக்க, தமிழக அரசு முயலுவது ஏன்? மொத்தம், 5,000 சதுர அடியில், நவீன நினைவகம் அமைப்பதற்கு, உ.பி., அரசு முன் வரும் போது, 100 சதுர அடியில் மார்பளவு சிலை மற்றும் சில நுால்களை மட்டும் வைத்து, நினைவகம் எழுப்புவது ஏன்? நினைவகத்துக்கான அனுமதியை உ.பி., அரசிடமிருந்து பெறுவதற்கு முன், முதல்வர் ஸ்டாலின், அதை திறக்க வேண்டிய அவசியம் என்ன?

‘தமிழ்… தமிழ்…’னு சொல்லி, ‘படம்’ காட்டிட்டு இருந்தாங்க… அவங்க, ‘ரீல்’ அறுந்து போகுற மாதிரி, மத்திய அரசு செயல்படலாமா?
அய்யா வைகுண்டர் மக்கள் கட்சியின் தலைவர் முத்து ரமேஷ் நாடார் அறிக்கை:
போக்குவரத்து விதிகளை மீறி, முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில், சென்னை மேயர் பிரியா, கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தொங்கியபடி பயணம் செய்ய அனுமதி அளித்த முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்திற்கு முன், அனைவரும் ஒன்று தான் என்பதை உணர்த்த வேண்டும்.
சட்டம் என்பதெல்லாம் சாமானிய மக்களுக்கு தான்; மக்கள் பிரதிநிதிகளுக்கு அல்ல!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்