ரூ.200 கோடி மோசடி வழக்கு : நடிகை ஜாக்குலின் கோர்ட்டில் ஆஜர்

பெங்களூருவை சேர்ந்த பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து கொண்ட தொழில் அதிபர்களிடம் 200 கோடி மோசடி செய்துள்ளார். இந்த மோசடியில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் அவரது பெயரை சேர்த்து விசாரித்து வருகிறது.

மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு 7 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள், பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. சுகேஷ் சந்திரசேகரின் மோசடி தெரிந்து இருந்தும் ஜாக்குலின் அவரோடு பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக டில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி நடிகை ஜாக்குலின் விளக்கம் அளித்து வந்தார்.

இந்த வழக்கில் ஜாக்குலின் முன் ஜாமீன் பெற்றுள்ளார். இந்த நிலையில், ஜாக்குலின் நேற்று டில்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம் பண மோசடி தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது.

“ஜாக்குலின் அமலாக்கத்துறை முன் அளித்த வாக்குமூலத்தை தற்போது நீதிமன்றத்தில் அளித்துள்ளார். குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர் அறியாமல் செய்ததாக தெரிவித்திருக்கிறார். என்றாலும் அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாவது கிடைக்கும்” என்று சட்டவல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.