சென்னை மாநகராட்சியின் 59ஆவது கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த சரஸ்வதி உள்ளார். கடந்த 10ம் தேதி மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது போர் நினைவுச் சின்னம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ரெயின் கோட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சரஸ்வதியின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றனர்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத திமுக கவுன்சிலர் நகையை பறி கொடுக்காமல் இருக்க வழிப்பறி கொள்ளையர்களுடன் போராடியுள்ளார். இந்த சம்பவத்தில் தனது மூன்றரை சவரன் தங்கச் செயினை கொள்ளையர்களிடம் பறி கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் திமுக பெண் கவுன்சிலரிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது தண்டையார்பேட்டை சேர்ந்த அப்துல் ஜாபர் என்பதை தெரியவந்தது. இதனை தொடர்ந்து கோட்டை காவல் நிலைய போலீசார் அவனை கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த 17 வயது இளஞ்சிராரும் கைது செய்யப்பட்டுள்ளான்.
கோட்டை காவல் நிலைய போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அப்துல் ஜாபர் மீது 10க்கு மேற்பட்ட வழிவறி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. மேலும் வியாசர்பாடியை சேர்ந்த அவரது நண்பனுடன் இணைந்து கடந்த 7 நாட்களில் 5க்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளான். போலீசார் தன்னை அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக ரெயின் கோட் அணிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளான். அப்துல் ஜாஃபர் காதலிக்கும் பெண்ணுடன் ஆடம்பரமாக இருப்பதற்காக வழிவரியில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.