திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி – உதயநிதிக்கு வாழ்த்து

திமுக எம்.எல்.ஏவும், முதலமைச்சர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டுமென அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆரம்பித்துவைத்தார். நண்பர் என்ற முறையில் அன்பில் அவ்வாறு பேசினார் என பலர் கூறினர். இதனையடுத்து திமுகவின் சூப்பர் சீனியரான ஐ.பெரியசாமி தலைமையில் நடந்த கூட்டத்திலும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உதயநிதி அமைச்சராக வேண்டும் என்பது திமுகவின் ஒட்டுமொத்த குரலாக ஒலித்தது.

ஆனால் ஏற்கனவே வாரிசு அரசியல் என்று பெயர் எடுத்திருக்கும் திமுக; உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் அந்த வாரிசு அரசியல் பட்டம் வலுப்பெறக்கூடும் என ஸ்டாலின் உதயநிதிக்கான அமைச்சர பட்டாபிஷேகத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். இந்தச் சூழலில் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்தது. ஆளுநர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

அமைச்சரான உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். இந்தச் சூழலில் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் உதயநிதி அமைச்சரானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், உதயநிதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக கூறினார். இதேபோல் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்திலும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

முன்னதாக கடந்த 12ஆம் தேதி ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி அவரது ரசிகர்கள் ரஜினியின் இல்லம் முன்பு குவிந்தனர். அப்போது அவர் ஊரில் இல்லாததால் ரசிகர்களை அவரால் சந்திக்க முடியவில்லை என கூறப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.