2023 சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையை புறக்கணிக்க கேரள அரசு முடிவு!

2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ஆளுநரின் உரையை புறக்கணிக்க, கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் ஆளுநராக இருப்பவர், ஆரிப் முகமது கான். இவர், ஆளுநராக நியமிக்கப்பட்டதில் இருந்தே, மாநில அரசுக்கும், இவருக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவியது.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில், ஆளுநர் ஆரிப் முகமது கான் – முதலமைச்சர் பினராயி விஜயன் இடையேயான மோதல் வெளிச்சத்திற்கு வந்தது. பல்வேறு பேட்டிகளில், ஆளும் அரசை, ஆளுநர் ஆரிப் முகமது கான் கடுமையாக விமர்சித்தார். இதற்கு அமைச்சர்களும் பதிலடி கொடுத்தனர்.

இதற்கிடையே, பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கி, முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பான மசோதா, அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையின் ஏழாவது கூட்டத்தொடர் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஒரு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு, மாநில ஆளுநரிடம், அமைச்சரவை ஒத்தி வைக்கப்பட்டது தொடர்பாக தகவல்கள் தெரிவிக்க வேண்டும். ஆனால் கேரள அமைச்சரவை, இதுவரை ஆளுநரிடம் எந்த வித தகவலும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ஆளுநரின் உரையை புறக்கணிக்க, கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக, ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் சட்டப்பேரவைத் கூட்டத்தொடரில், ஆளுநர் உரையாற்றுவது வழக்கம். அப்போது மாநில அரசின் கொள்கைகள், அறிவிப்புகள் குறித்து ஆளுநர் உரையாற்றுவார். இந்நிலையில், ஆளுநர் உரையை புறக்கணிக்க கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், ஆளுநர் – மாநில அரசு இடையேயான மோதல் நீள்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.