விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அருகே முதுகுடியில், சாக்கடை மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் அதற்கான எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூறுக்கும் மேற்பட்டோர் இன்று முதுகுடியில் இருந்து எஸ்.ராமலிங்காபுரம் செல்லும் சாலையில் ஒன்று கூடி அந்த வழியாக வந்த அரசு பேருந்தை மறைத்து மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள் தங்கள் பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்துதராமல் புறக்கணிக்கப்படுவதாக கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்ட போலீசார், அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் சாலையில் இருந்து கலைந்து சென்றனர். அதன் பின்னர் சுமார் மூன்று மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.