குளுகுளு சீசனை அனுபவிக்க கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: தங்கும் விடுதிகள் ஹவுஸ்புல்

கொடைக்கானல்: கொடைக்கானலில் நிலவும் குளிர் சீசனை அனுபவிக்க சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது குளிர் சீசன் நிலவுகிறது. அதிகாலையில் உறைய வைக்கும் குளிருடன் துவங்குகிறது. பகல் நேரத்தில் வெயில், அவ்வப்போது மேக கூட்டம் முகாமிடுகிறது. இதனால் இதமான சூழல் நிலவுகிறது. ஆனால் இரவில் தலைகீழாக நிலைமை மாறி உறைய வைக்கும் குளிர் நிலவுகிறது. இந்த குளிர் சீசன் ஜனவரி முடியும் வரை தொடரும். வரும் நாட்களில் உறை பனி தொடங்கும் நிலை ஏற்படும் என்று வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, விடுமுறை நாளான நேற்று கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.

இதனால் தங்கும் விடுதிகள் ஹவுஸ்புல் ஆகின. நகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவியது. பிரையண்ட் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் மலர்களை ரசித்து பார்த்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நட்சத்திர ஏரியில் ஆர்வத்துடன் படகு சவாரி செய்தனர். மோயர் பாயின்ட் பகுதியில் மேகக்கூட்டத்தை ரசிக்க சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதியது. வியாபாரிகள் கூறுகையில், ‘‘கொடைக்கானலில் நடுங்கும் குளிரை அனுபவிக்க சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகின்றனர். வார விடுமுறை என்பதால் அதிக அளவிலான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.