திருவனந்தபுரம்: சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. இன்று 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்து உள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இந்த வருட மண்டல கால பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின.
கடந்த 2 வருடமாக அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் நடை திறந்த நாள் முதல் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த மாதம் தினமும் சராசரியாக 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில், இந்த மாதம் மேலும் அதிகரித்து சராசரியாக 90 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த மாதத்தில் 3 நாட்கள் பக்தர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டியது. இதனால் 10 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆகவே சபரிமலையில் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இந்தநிலையில் 41 நாள் நீளும் மண்டல காலம் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. மண்டல பூஜைக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருக்கிறது.
அதன்படி நேற்று 1 லட்சத்து 5 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்திருந்தனர். இதில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று சுமார் 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். இதனால் காலை முதலே சபரிமலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
* தனி வரிசையால் எளிதில் தரிசனம்
சபரிமலையில் நேற்று முன்தினம் முதல் பெண்கள், குழந்தைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. சன்னிதானம் அருகே உள்ள நடைப்பந்தல் பகுதியில் இருந்து இவர்களை போலீசார் தனி வரிசைக்கு அழைத்துச் செல்கின்றனர். இவர்களுடன் வரும் ஒன்று அல்லது 2 பேருக்கும் இந்த வரிசையில் செல்ல அனுமதி உண்டு.
18ம்படி அருகே அவர்கள் ஓய்வு எடுக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக சன்னிதானத்தில் உள்ள திருமுற்றம் பகுதியில் இருக்கைகள் போடப்பட்டு உள்ளன. நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வரிசையில் சென்று எளிதில் தரிசனம் செய்து திரும்பினர். அவர்களுக்கு குடிநீர், பிஸ்கட் ஆகியவையும் வழங்கப்படுகிறது.