“கூடா நட்பு கேடாய் முடியும்; ஓபிஎஸ் நட்பை தவிர்ப்பது நல்லது!" – பண்ருட்டிக்கு ஜெயக்குமார் அட்வைஸ்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு `கூடா நட்பு கேடாய்’ முடியும் என அறிவுரை வழங்கியிருக்கிறார்.

கடந்த சில நாள்களாக அ.தி.மு.க-வினர், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். அந்த வரிசையில் சென்னையில், பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் ஜெயக்குமார் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜெயக்குமார்

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமாரிடம், இ.பி.எஸ் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் சேர்த்துக்கொள்வோம் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருப்பதாகப் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், “அண்ணனை நான் மதிக்கிறேன். மற்றவர்களைக் கடுமையாக விமர்சனம் பண்ணுவேன். ஆனால் அண்ணன் பண்ருட்டியை மட்டும் கடுமையாக விமர்சனம் செய்ய மாட்டேன். அவர் மேல் எனக்கு மரியாதை உண்டு. ஆனால் அவர் ஏன் இப்படி ஆகிவிட்டார் என்று நான் வருத்தப்படுகிறேன்.

பண்ருட்டி ராமச்சந்திரன் – ஓ.பி.எஸ்

பண்ருட்டி அண்ணனுக்கு நல்ல இமேஜ் இருக்கு. அதை வீணாக கெடுத்துக்க வேண்டாம் என்பதுதான் என்னுடைய எண்ணமும்கூட. அதாவது ஒரு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது மாதிரி, அந்த கேடாய் நட்பை தயவு செய்து தவிர்த்துவிடுவது நல்லது. இதை அண்ணன் பண்ருட்டியாருக்கு சொல்கிற அட்வைஸ் ஆகவே எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.

அதேபோல் ஓ.பி.எஸ் அணியினரின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாகத் தற்குறி என்று விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.