காரைக்கால்: கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறை பிடித்து சென்றனர். காரைக்கால் அடுத்த காரைக்கால்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார், தங்கவேல், ஆறுமுகம், பிரபு, மாணிக்கவேல், மதன், மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரை சேர்ந்த கண்ணதாசன், முத்துவேல், செல்வமணி, பூம்புகார் அடுத்த வானகிரியை சேர்ந்த தண்டபாணி, செந்தில் ஆகிய 11 மீனவர்கள் நேற்றுமுன்தினம் காரைக்கால் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
நேற்று மாலை வெத்தலகேணிக்கு வடகிழக்கே கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்ததோடு, எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி 11 பேரையும் துப்பாக்கி முனையில் சிறைபிடித்து சென்றனர். தொடர்ந்து விசை படகையும் பறிமுதல் செய்தனர். மீனவர்களை இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டுசென்று மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது காரைக்கால் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.