சீனாவில் படுவேகமாக பரவிவரும் BF -7 வகை உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா வைரஸை, உலகெங்கிலும் மீண்டும் கொரோனா அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொரோனாவின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், இநதியாவில் இது பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரி்க்கை நடவடிக்கைகளை துவக்கி உள்ளன.
இவற்றில் முக்கியமாக சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு, அவர்கள் விமானத்தில் வந்திறக்கும் சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு விமானத்தில் வந்திறங்கும் பயணிகளில் 2% பேருக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அவர்களிடம் கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பின்னரே அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நைமுறை நாளை மறுநாள் முதல் (டிசம்பர் 24) அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாதிரி சேகரிக்கப்படுவோரின் யாருக்கேனும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அந்த தொற்று எந்தவகையான கொரோனா என்பதை கண்டறியும் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.