காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி நடத்திவரும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில், நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டார்.
108-வது நாளாக ராகுல்காந்தி நடத்திவரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்று காலை தலைநகர் டெல்லியை சென்றடைந்தது. காலையில் நடைபயணத்தில் ராகுல்காந்தியுடன், சோனியாகாந்தி, பிரியங்காகாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாலையில் நடைபெற்ற நடைபயணத்தில் ராகுல்காந்தியின் அழைப்பை ஏற்று, கமல்ஹாசன் கலந்துகொண்டார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ, ராகுல்காந்தியுடன் இணைந்து அவர் நடந்துச்சென்றார்.
பின்னர் பேசிய கமல்ஹாசன், தன்னுடைய தந்தையும் காங்கிரஸ் கட்சிக்காரர்தான் என்றார். தேசத்தின் ஒற்றுமைக்காகவே, ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்றதாக தெரிவித்த அவர், இந்த யாத்திரையை தனது அரசியல் பயணத்தின் தொடக்கமாக கருதுவதாகவும் குறிப்பிட்டார்.