ரூ.345க்கு ரூ.10,000 என பொய் கூறுபவர்கள் பாஜவினர்: அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கு

கோவை: தந்தை பெரியாரின் 49வது நினைவு தினத்தையொட்டி கோவை காந்திபுரம், பெரியார் படிப்பகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின் அவர் கூறுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் இழந்த பெருமைகளை மீட்டெடுத்து இன்று ஒரு சிறந்த ஆட்சியை முதல்வர் நடத்தி வருகிறார். வரும் ஆண்டுகளில் கோவை மண்ணிற்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளோடு கூடுதலாக திட்டங்களை நிறைவேற்றி தருவார். மேம்பால பணிகள், சாலை பணிகள், குடிநீர் திட்ட பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிதிகளை முதல்வர் வழங்குகிறார்.

பாஜ, தமிழகத்தில் எங்கு உள்ளது. எத்தனை பேர் உள்ளனர். எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளன என்பது தெரியாத கட்சி. 345 ரூபாய் மதிப்புள்ள காது கேளாதோர் கருவியை கொடுத்துவிட்டு 10,000 ரூபாய் என பொய் சொல்லக்கூடியவர்கள். சிங்காநல்லூர் ரயில்வே மேம்பாலத்திற்கு ரூ.29 கோடி நிதியை முதல்வர் வழங்கியுள்ளார். விரைவில் பாலம் பணி தொடரும். கடந்த அதிமுக ஆட்சியில் இந்த பாலத்திற்கு நிதி ஒதுக்கவில்லை, என்றார். திமுக மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் எம்பி நாகராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.