புதிய வகை கொரோனா: பள்ளிகள், கல்லூரிகளில் கட்டுப்பாடுகள் அமல்!

உருமாறிய கொரோனா வைரஸான பிஎப் 7 உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வகை வைரஸ் பரவல் சீனாவில் மிக அதிகளவில் பரவி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.

சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் தற்போது அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் மத்திய சுகாதாரத் துறை மாநில அரசுகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையிலும், பிரதமர் மோடி தலைமையிலும் அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியும், கொரோனா பரிசோதனைகளை, தடுப்பூசிகள் செலுத்துவதை தீவிரமாக செயல்படுத்த வேண்டியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் சுகாதாரத் துறை அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதே போல் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சுகாதாரத் துறை அதிகாரிகள், கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.

அதில் கொரோனா வைரஸ் பரவுவதை எவ்வாறு தடுப்பது, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் பேசிய போது, “பெங்களூரு, மங்களூரு உள்ளிட்ட‌ சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, திரையரங்கம், குளிரூட்டப்பட்ட அறைகள் உட்பட உள் அரங்குகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மெட்ரோ ரயில், பேருந்து ஆகியவற்றிலும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சளி, காய்ச்சல், இருமல் ஆகிய அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டை பொதுமக்கள் உரிய‌ கட்டுப்பாடுகளுடன் கொண்டாட வேண்டும்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.