நாக்பூர்: மகாராஷ்டிரா, கர்நாடகா இடையேஎல்லைப் பிரச்சினை கடந்த 1957-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தின் பெலகாவி, முன்பு பாம்பேவின் ஒரு பகுதியாக இருந்தது. மகாராஷ்டிரா எல்லையை ஒட்டியுள்ள கர்நாடக பகுதியில் 800-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் மராத்தி பேசுகின்றனர்.
அதனால் இந்தப் பகுதிகளை தங்கள் மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என மகாராஷ்டிரா கூறுகிறது. மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்படி மொழி அடிப்படையில் செய்த வரையறை தொடர்பாக மகாஜன் ஆணையம் கடந்த 1967-ம் ஆண்டு தாக்கல்செய்த அறிக்கை இறுதியானது என கர்நாடகா கூறுகிறது.
இந்நிலையில் தங்கள் மாநிலத்தின் ஒரு அங்குலம் நிலத்தை கூட, மகாராஷ்டிராவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் என கர்நாடகா பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு போட்டியாக மகாராஷ்டிரா பேரவை நேற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. அதில் கர்நாடகாவில் மராத்தி பேசப்படும் 865 கிராமங்களை மகாராஷ்டிராவுடன் சட்டப்பூர்வமாக இணைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடரப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.