தூத்துக்குடி: முதல் திருமணத்தை மறைத்த கணவர்; ஒரே கயிற்றில் தூக்கிட்ட புதுமண ஜோடி! – என்ன நடந்தது?

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் அருகிலுள்ள அனந்தமாடன் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமுனியசாமி . இவர், தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சீதாசெல்வி. அருகில் உள்ள துவரந்தை கிராமத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த  மூன்று மாதங்களுக்கு முன்பு, வீட்டின் எதிர்ப்பை மீறி அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் காதல் திருமணம் செய்தனர். தனியாக வீடு வாடகை எடுத்து தங்கியிருந்திருக்கின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட தம்பதிகள்

இவர்களின் திருமணத்திற்கு சீதாசெல்வியின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். திருமணமான நாள் முதல் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாகச்  சொல்லப்படுகிறது.  இந்த நிலையில், இன்று வெகுநேரமாகியும் இவர்களின் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியே பார்த்தபோது ஒரே கயிற்றில் கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்தனர்.

தகவலறிந்து தருவைகுளம் காவல் நிலைய போலீஸார் இருவரின் உடல்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், தங்கமுனியசாமிக்கு ஏற்கெனவே திருமணம் நடந்துள்ளதை மறைந்திருந்தாராம்.  இந்த விஷயம் சீதாசெல்விக்கு தெரியவந்திருக்கிறது. இது தெரிந்து இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அடிக்கடி சண்டை போடுவதும் அக்கம் பக்கத்தினர் விலக்கி விடுவதுமாக இருந்துள்ளது.

தருவைக்குளம் காவல் நிலையம்

முதல் திருமணத்தை மறைத்ததால் சீதாசெல்வியின் குடும்பத்தினரும் சீதாசெல்வியிடம் சண்டை போட்டுள்ளனராம். இந்த நிலையில்தான் நேற்றும் இருவருக்கும் இடையில் வாய்த்தகராறு முற்றியுள்ளதாம். நேற்றும் அருகில் உள்ளவர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து இரவில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். காதல் திருமணம் செய்த தம்பதிகள் மூன்றே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பினையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.