சென்னை: “புத்தாண்டு அன்று சென்னையில் கடற்கரை சாலைகளில் இரவு 7 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை” என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் துறை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று (டிச.29) வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சென்னையில் பைக் ரேசை தடுக்க சோதனைச் சாவடிக்ள அமைக்கப்படும். மொபைல் கண்காணிப்பு வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இரவில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது. மரணம் இல்லாத புத்தாண்டாக இந்தப் புத்தாண்டு அமைய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
கடற்கரை சாலையில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். எலியடஸ் கடற்கரையிலும் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. ரோந்து வாகனங்களில் சிசிடிவி கேமரா வைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளப்படும். யாரும் பைக் ரேசில் ஈடுபடக் கூடாது.
புத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பாக விடுதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மொத்த இருக்கையில் 80 சதவீதத்திற்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மது விற்பனை செய்யும் இடங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை அனுமதிக்க கூடாது. அடையாள அட்டை சோதனை செய்துதான் அனுமதிக்க வேண்டும். நட்சத்திர விடுதிகளில் இரவு 1 மணிக்குள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொள்ள வேண்டும். போதைப் பொருட்களை பயன்படுத்தும் நட்சத்திர விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும். உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் இன்று முதல் தொடர்ந்து விடுதிகளை ஆய்வு செய்வார்கள்” என்று அவர் தெரிவித்தார்.