புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசின் ஒற்றுமைக்கான நடைப்பயணம் 100 நாள்களை கடந்து நடைபெற்று வருகின்றது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் நடைபயணம் முடிந்துள்ள நிலையில் கடந்த வாரம் டெல்லிக்குள் நுழைந்தது. அப்போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்த டெல்லி காவல்துறை தவறிவிட்டதாகவும், ராகுலுக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு உள்ள நிலையில் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும் காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ள காங்கிரஸ் கட்சி, ‘வரும் நாள்களில் பஞ்சாப், காஷ்மீரில் நடைபெறவுள்ள நடைப்பயணத்தில் ராகுலின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு மத்திய ரிசர்வ் படை தரப்பில் உள்துறை அமைச்சகத்துக்கு அளித்துள்ள பதிலில், ‘பாதுகாப்பு விதிமுறைகளை ராகுல்காந்தி பலமுறை மீறியுள்ளார். விதிகளை மீறும் போதெல்லாம் அவரிடம் கூறியுள்ளோம். கடந்த 2020 முதல் இதுவரை 113 முறை விதிமுறைகளை ராகுல் காந்தி மீறியுள்ளார். டெல்லி நடைப்பயணத்தின் போதும் விதிகள் மீறப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் டெல்லி காவல்துறை மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டோம். பாதுகாப்புக்கு தேவையான காவலர்களை டெல்லி காவல்துறை பணியமர்த்தியது’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.