அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தயார் ஹீராபென், குணமடைந்து வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை அறிவித்துள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில், ”அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
தாயார் ஹீராபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை மருத்துவமனைக்குச் சென்று தாயாரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். ஹீராபென்னின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் பிரதமரிடம் விளக்கிக் கூறினர்.
இந்நிலையில், மருத்துவமனை சார்பில் இன்று இரண்டாவது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஹீராபென் மோடி குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு என்ன பிரச்னை என்பது குறித்தோ எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்தோ மருத்துவமனை தரப்பில் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
கடந்த ஜூன் மாதம் தனது 100-வது பிறந்தநாளை ஹீராபென் கொண்டாடினார். சமீபத்தில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்குச் சாவடிக்கே வந்து அவர் வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.