சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் இன்று ஓட்டல் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கூட்டம் முடிந்த பின்னர் தனியார் ஓட்டல் நிர்வாகி சுரேஷ் கூறுகையில், “புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதை பொருட்களை எடுத்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொண்டாட்டங்களுக்கு வருபவர்கள் போதை பொருட்களை வைத்துள்ளார்களா என்று பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். ஆம்புலன்ஸ் வாகனங்களை தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீச்சல் குளத்தின் அருகே மேடை அமைக்க கூடாது. 80 சதவீதம் அளவுக்கே நபர்களை அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக போலீசாரை அழைக்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளையும் போலீசார் வழங்கினர். 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
முன்னதாக தமிழ்நாடு காவல் துறை, “* 31. 12.2022 அன்று இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது, 3112.2022 அன்று மாலை முதல் சுமார் 90,000 காவல்துறையினர். 10,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
* வாகனச் சோதனை தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். எனவே, நள்ளிரவு, மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
* நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை • முதல்நாள் இரவும், புத்தாண்டின் போதும் கடற்கரைகளில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில்ஈடுபடக் கூடாது.
* மது அருந்தியவர்கள், வாகனம் ஓட்டக் கூடாது. மீறினால் கைது செய்யப்படுவர், அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
* அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துக்களை தவிர்க்கவும் உயிர் சேதத்தை குறைக்கவும் மட்டுமே இந்த நடவடிக்கைகள்,
* மோட்டார் வாகனங்களில் நீண்ட தூரம் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள், மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி தேநீர் அருந்தி, பின்னர் பயணத்தினை தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்காக இரவு முழுவதும் நெடுஞ்சாலைக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
* வழிபாட்டுத் தலங்களுக்கு காவல்துறையால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள், வெளியூர்களுக்கு செல்பவர்கள்,அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால் பூட்டிய வீட்டருகில் காவல் ரோந்து ஏற்பாடு செய்யப்படும். இதனால் பூட்டிய வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் தவிர்க்கப்படும்.
* கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
* கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய ரோந்து வாகனங்கள் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் பற்றிய தகவலை காவல்துறைக்கு 100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தரும் பொதுமக்களின் இரகசியம் காக்கப்படும்.
* அவசர உதவி தேவைப்படுபவர்கள் ‘காவல் உதவி’ என்ற அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதற்கு ‘காவல் உதவி’ செயலியை இன்றே பதிவிறக்கம் செய்யவும் கேட்டுக்கொள்கிறோம்.
* அசம்பாவிதம் இல்லாத, விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட தமிழக காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.