வருகிற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னை மாநகரில் போலீசார் தரப்பில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
“வரும் புத்தாண்டு தினத்தன்று சென்னையில் மட்டும் பதினாறு ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். புத்தாண்டு பைக் ரேஸ் நடக்காமல் இருப்பதற்கு தீவிரமாக கண்காணிக்கப்படும்.
பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் அனைவரும் “உயிரிழப்புகள் இல்லாத புத்தாண்டு” என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட உள்ளோம்.
புத்தாண்டு தினத்தன்று மெரினா கடற்கடையில், பொதுமக்கள் கூடுவதற்கு தடையில்லை. மக்கள் கூட்டத்தை கண்காணிப்பதற்கு அதிநவீன டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி முதல் கலங்கரை விளக்கம் வரை மாலை 7 மணி முதல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கடற்கரை பகுதியில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டால், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சீல் வைக்கப்படும். மேலும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.