”யுவனுடன் சேர்ந்து எப்போ படம் பண்ணுவீங்க?” பா.ரஞ்சித்தின் நச் பதிலும் யுவனின் ரியாக்‌ஷனும்

இசைப் பிரியர்களின் ஆரவாரத்துடன் மார்கழியில் மக்கள் இசை, சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் நாள் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் தலைமையில் தொடங்கிய இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யுவன் சங்கர் ராஜா, பேரறிவாளன், அற்புதம்மாள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, “4 வருடங்களாக மார்கழி மக்களிசையை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் விட்டுவிட்டேன். இசைக்கு சாதி, மதம் என்று எதுவும் இல்லை. இசையால் தான் அனைவரும் இணைந்து இருக்கிறோம். பா. ரஞ்சித் அவர்களுக்கு இசையின் மீது தீரா காதல் உள்ளது. இத்தகைய நிகழ்ச்சியின் மூலம் பல இசை கலைஞர்களுக்கு பா.ரஞ்சித் புதிய வாய்ப்புகளை வழங்கி இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

பின்னர் யுவன் சங்கர் ராஜா திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகளை கடந்துள்ளதால், ரசிகர்கள் யுவனுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். மேலும் சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்த ‘லவ் டுடே’ படத்தின் பாடலான “என்னை விட்டு உயிர் போனாலும்… உன்னை விட்டு நான் போமாட்டேன்” என்ற பாடலை ரசிகர்களுக்கு மத்தியில் அவர் பாடி அசத்தினார்.

யுவன் சங்கர் ராஜாவை தொடர்ந்து பேசிய பா.ரஞ்சித், ‘ஜெய்பீம்’ என்ற வார்த்தையைக் கூறி பேச துவங்கினார். அப்போது “இளையராஜா அவர்கள் எனக்கு ஒரு உணர்வு. இளையராஜாவை பார்த்து தான் திரையுலகிற்கு அனைவரும் வருகின்றனர். ராஜா அவர்களின இசையை கேட்கும் போது ஏற்படக்கூடிய உணர்வு தான் யுவன் சங்கர் ராஜாவின் இசையை கேட்கும்போது ஏற்படுகிறது. எனக்கு ஏற்படக்கூடிய வலிகளை இசையின் மூலமாக தான் மறக்கிறேன்” என்று தெரிவித்தார்.

பா. ரஞ்சித் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் விரைவில் ஒரு படம் உருவாகும் எனவும் இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்தார். அந்த மேடையிலேயே “நான் தயார்” என்று அழுத்தமாக யுவனும் கூறினார். 

பின்னர், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க லவ் டுடே படத்தில் இருந்து “என்னைவிட்டு நீ போனாலும் உன்னைவிட்டு நான் போமாட்டேன்” என்ற பாடலையும் யுவன் பாடினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.