திருச்செந்தூர் முருகன் கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி பக்தர்களின் செல்போனை பாதுகாக்க பாதுகாப்பு அறை தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதற்காக பக்தர்களிடம் இருந்து ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும்.
திருச்செந்தூர் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கோவிலுக்கு அழைத்து வர இலவச வாகனங்கள் இயக்கப்படுகிறது. முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் இல்லாத பட்சத்தில் மற்ற பக்தர்களையும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது திருச்செந்தூர் கோயிலில் மேற்கொள்ளப்படும் பெருந்திட்ட வளர்ச்சி பணிகள் 2024ம் ஆண்டு நிறைவடையும்.
முருக பக்தர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டு வரும் யாத்திரை நிவாஸ் வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று விட்டார். இனிவரும் காலங்களில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் செயல்படுவார்” என தெரிவித்துள்ளார்.