நாசிக்: நாசிக்கில் விடுதியில் வழங்கிய உணவில் நச்சுத்தன்மை இருந்ததால் 125 மருத்துவ மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் இகத்புரி அடுத்த எஸ்.எம்.பி.டி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் படிக்கும் மாணவர்கள், அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தனர். அவர்களுக்கு நேற்று முன்தினம் வழங்கப்பட்ட உணவில் விஷத் தன்மை இருந்ததால், மாணவர்களுக்கு குமட்டல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது.
அதனால், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நோய்வாய்ப்பட்டனர்; அவர்களில் 55 பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், ‘விடுதியில் உள்ள கேண்டீனில் மதிய உணவு சாப்பிட்ட 125 மாணவர்களுக்கு குமட்டல், வயிற்று வலி ஏற்பட்டது.
அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது 55 மாணவர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர். தனியார் நிறுவனத்தின் மூலம் கேண்டீன் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் விஷத்தன்மை கலந்தது குறித்து அதன் மாதிரிகள் எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.