விற்பனைக்காக வீட்டில் பட்டாசு பதுக்கிவைத்த விற்பனையாளர்… திடீர் விபத்தால் ஏற்பட்ட துயரம்

நாமக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 11-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிக்சை பெற்று வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் தில்லை குமார். பட்டாசு விற்பனை செய்ய அனுமதி பெற்றுள்ள இவர், மோகனூர் அருகே குமரிபாளையத்தில் குடோன் வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பட்டாசு விற்பனை செய்யும் வகையில் அதிகளவு பட்டாசுகளை இவர் நேற்று தனது வீட்டுக்கு எடுத்து வந்து வைத்திருந்ததாகத் தெரிகிறது.
image
இந்நிலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் விபத்தில் வீட்டில்  தில்லை குமார் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளது. இதில், வீட்டில் இருந்த சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வெடித்ததில் 5-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது. மேலும் அருகில் இருந்த 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகளும் இடிந்து சேதமடைந்தன. இந்த விபத்தின் போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தில்லைகுமார் உயிரிழந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெரியக்காள் என்பவரும் உடல் சிதறி உயிரிழந்தார்.
மேலும் அருகில் இருந்த வீடுகளில் வசித்து வந்த 11 பேர் காயமடைந்து நாமக்கல் மற்றும் மோகனூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நாமக்கல், கரூர், மோகனூர் தீயணைப்பு வாகனங்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்நிலையில் கட்டட இடிபாடுகளில் யாராவது சிக்கி உள்ளார்களா எனவும் சேதம் குறித்தும் வருவாய் மற்றும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
image
பட்டாசு குடோன் அமைக்க வேறு இடத்தில் அனுமதி பெற்று வீட்டில் பட்டாசுகளை அதிகளவு பதுக்கி வைத்திருந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.