தமிழுக்கு பெருமை சேர்க்கும் திராவிட மாடல் அரசு: வியக்க வைக்கும் சாதனைகள்!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியமைக்கும் போதெல்லாம் தமிழ், தமிழர் நலன் ஆகியவற்றுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து அதற்காக சிறப்பு திட்டங்கள் தீட்டப்படுவது வழக்கம். முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ள

அண்ணா, கலைஞர் வழியில் இதை முன்னெடுத்து வருகிறார்.

தமிழ்நாட்டு அரசுத் துறை பணியிடங்களில் நுழைபவர்களுக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள அனைத்து தெரிவு முகமைகளைப் பொறுத்தவரையில் கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலயங்களில் அன்னைத் தமிழ் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம், தமிழ் அறிஞர்கள் நூல்கள் நாட்டுடமை, எழுத்தாளர்கள் பிறந்தநாளில் கூட்டங்கள், குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு, திராவிடக் களஞ்சியம் உருவாக்கம், இதழியலாளர்க்கு கலைஞர் எழுதுகோல் விருது,

உலகப் பல்கலைக் கழகங்களில் செம்மொழித் தமிழ் இருக்கைகள், நூலகங்களுக்கு சிற்றிதழ்கள், இலக்கியமாமணி விருதுகள், திசைதோறும் திராவிடம், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம் என பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன

எழுத்தாளர்களுக்கு வீடு

தமிழ் மொழியைக் கொண்டாடும் போது எழுத்தாளர்களை கொண்டாட வேண்டாமா? தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவு இல்லத் திட்டத்தை அறிவித்தார்.

அதன்படி 2021-22ஆம் ஆண்டிற்கான கனவு இல்லத் திட்டத்திற்கு ஈரோடு தமிழன்பன், கவிஞர் புவியரசு, இ. சுந்தரமூர்த்தி, பூமணி, கு. மோகனராசு, இமையம், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. ஜி. திலகவதி, பொன். கோதண்டராமன், சு. வெங்கடேசன், ப. மருதநாயகம், மறைமலை இலக்குவனார், இரா. கலைக்கோவன், எஸ். இராமகிருஷ்ணன், கா. ராஜன், ஜோ.டி. குருஸ், வண்ணதாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தகைசால் தமிழர் விருது

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் தகைசால் தமிழர் விருது பெறும் விருதாளருக்குப் பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திர தின விழாவின்போது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும். 2021ஆம் ஆண்டு தோழர் சங்கரய்யாவுக்கும், 2022ஆம் ஆண்டு தோழர் நல்லகண்ணுவுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

கலைஞர் நூலகம்

2010ஆம் ஆண்டில் அண்ணாவின் 102வது பிறந்தநாள் அன்று சென்னை கோட்டூர்புரத்தில் தெற்காசியாவில் இரண்டாவது அதிநவீன மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கலைஞர் திறந்து வைத்தார். கலைஞரின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.7 ஏக்கர் நிலத்தில் 2 லட்சத்து 179 சதுர அடி கட்டிட பரப்பளவில் 7 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இதில் நூலகத்தின் கட்டமைப்புக்கு 99 கோடி ரூபாயும், நூலகத்திற்கு தேவையான நூல்கள், மின்நூல்கள் இணையவழி பருவ இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்தவற்கு ரூ.10 கோடி, தொழில்நுட்ப சாதனங்கள் கொள்முதல் செய்வதற்கு ரூ.5 கோடி என மொத்தம் 114 கோடி ஒதுக்கப்பட்டது.

அடித்தளத்தில் வாகன நிறுத்தத்துமிடமும், தரை தளத்தில் வரவேற்பு அரங்கம், தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாடு கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு ஆகியவையும், முதல் தளம் முதல் ஆறாம் தளம் வரை இரண்டு லட்சத்திற்கும் மேலான நூல்களுக்கான பிரிவுகளும் அமைகிறது. அடித்தளம் மற்றும் 7 மாடிகள் கொண்ட இந்த நூலகம் முற்றிலும் குளிரூட்டப்பட்டதாக அமைகிறது. மூன்று மாடிகள் வரை கண்ணாடிகளால் ஆன முகப்புத் தோற்றம் கொண்டதாக அமையும். இந்த நூலகத்தில் இலவச வைபை வசதி, மூன்று நகரும் படிக்கட்டுகள், ஆறு மின்தூக்கிகள் மற்றும் மாடித் தோட்டம் அமைகிறது.

மேலும், சுயமாகப் பரிமாறும் உணவு கூடம், குழந்தைகளுக்கான நிகழ்ச்சி அரங்கு, மாற்றுத்திறனாளிகளுக்காக தரைத் தளத்தில் பிரத்யேக பிரிவு, பார்வையற்றோர், காது கேளாதோருக்கான மின் மற்றும் ஒலி நூல்கள், 100 நான்கு சக்கர வாகனங்கள், 200 இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி என மதுரையில் அதிநவீன நூலகம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகம் பிப்ரவரி மாதம் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் கிளை நூலகம், மாவட்ட நூலகம் உள்ளிட்ட அனைத்து நூலகங்களையும் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சர்வதேச புத்தகக் கண்காட்சி!

சென்னை, மதுரை உள்ளிட்ட பெரிய நகரங்களில் நடத்தப்பட்டு வந்த புத்தகக் கண்காட்சிகள் இப்போது அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. அந்தந்த மாவட்ட நிர்வாகமும் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்களும் இணைந்து இந்த புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றனர்.

அத்துடன்சென்னையில் முதன்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சியை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்தி வரும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துடன் (பபாசி) பள்ளிக் கல்வித்துறை இணைந்து தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சியை 2023 ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது.

இதையொட்டி பொது நூலகத் துறை இயக்குநர் இளம்பகவத் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு ஜெர்மனி சென்று அங்கு நடந்த பிராங்ஃபர்ட் புத்தகக் கண்காட்சியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி சென்னையில் 2023 ஜனவரி மாதம் முதன்முறையாக நடத்தப்பட உள்ள சர்வதேச புத்தக கண்காட்சிக்கான இலச்சினையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அண்மையில் வெளியிட்டார். ஜனவரி 16, 17, 18-ம் தேதிகளில் தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் 2 வாரம் புத்தகக் கண்காட்சி நடைபெறும். இந்தாண்டு அதில் 3 நாட்கள் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில், 40 நாடுகளை பங்கேற்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செவ்வியல் படைப்புகள் தமிழில் மொழிபெயர்ப்பு!

உலகத் தரம் வாய்ந்த படைப்புகள் தமிழில் கொட்டிக்கிடந்தாலும் பிற மொழிகளுக்கு அவை கொண்டு செல்லப்படாததால் தமிழின் பெருமையை உலக மக்கள் அறியமுடியாத சூழல் உள்ளது. இதைப் போக்கும் வகையில் செவ்வியல் படைப்புகள் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இளங்கோவடிகளின் ‘The Tale of an Anklet’ (சிலப்பதிகாரம்), தலித் எழுத்தாளர் களுடைய சிறுகதைகளின் மொழிபெயர்ப்பான ‘In Defiance: Our Stories’, ஹெப்ஸிபா ஜேசுதாசனின் ‘Putham House’ (புத்தம் வீடு), எஸ்.ராமகிருஷ்ணனின் ‘Katha Vilasam’ (கதா விலாசம்), உ.வே.சா.வின் ‘Essays of U Ve Sa’ (உ.வே.சா.கட்டுரைகள்), தோப்பில் முஹம்மது மீரானின் ‘Meeran’s Stories’ (தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்), ஆகிய ஆறு நூல்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

‘முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்’. மருத்துவம், பொறியியல், சட்டம், கலைக்கல்வி உள்ளிட்ட கல்லூரி மாணவர்களுக்கான துறைசார்ந்த நூல்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்படவிருக்கின்றன. இதற்காக இந்திய அளவிலும் உலக அளவிலும் 37 பதிப்பகங்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

அகழ்வாராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம்

கீழடி அகழாய்வு மற்ற அகழாய்வுகளுக்கு முன்னோடி அகழாய்வாகத் திகழ்கிறது. இதுவரை கங்கைச் சமவெளியில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்த நகரமயமாக்கம் தமிழ்நாட்டில் இல்லையென்றும், பிராமி எழுத்து மௌரியர் தோற்றுவித்தது என்றும் கருதுகோள்கள் இருந்தன. அத்தகைய கருதுகோள்களுக்கு அறிவியல்பூர்வமாக விடையளித்துள்ளது கீழடி அகழாய்வு.

தமிழ்நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியுள்ளது.

கீழடியோடு சேர்த்து ஏழு இடங்களில் தற்போது அகழாய்வுகள் செய்யப்படுகின்றன. 1. கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள்( கொந்தகை, அகரம், மணலூர்), சிவகங்கை மாவட்டம் – எட்டாம் கட்டம் 2. சிவகளை, தூத்துக்குடி மாவட்டம் – மூன்றாம் கட்டம் 3. கங்கைகொண்டசோழபுரம், அரியலூர் மாவட்டம்- இரண்டாம் கட்டம் 4. மயிலாடும்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம்- இரண்டாம் கட்டம் 5. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் – முதல் கட்டம் 6. துலுக்கர்பட்டி, திருநெல்வேலி மாவட்டம்- முதல் கட்டம் 7. பெரும்பாலை, தர்மபுரி மாவட்டம்- முதல் கட்டம்.

அகழ்வாராய்ச்சியின் மூலம் அதில் தெரிய வரும் விடயங்கள் மூலம் இந்திய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் மாற்றி எழுதப்பட வாய்ப்பு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.