சேலம் அருகே கோயிலைச் சுற்றி மது அருந்துவதை தடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: சேலத்தில் இருட்டுக்கல் முனியப்பன் கோயிலைச் சுற்றி மது அருந்துவதை தடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சேலத்தை சேர்ந்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “சேலம் மாவட்டம் வளையகாரனூர் இருட்டுக்கல் முனியப்பன் கோவிலை சுற்றியும் மது அருந்துபவர்கள் காலிபாட்டில்களை வீசி செல்கின்றனர். வனப்பகுதியில் மரக்கிளைகள் வெட்டப்பட்டு எரியூட்டுகின்றனர். மேலும், அந்த வழியாக செல்லும் பெண்களிடம் மதுபோதையில் இருப்பவர்கள் தகராறில் ஈடுபடுகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, வனப்பகுதியை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண்களுக்கு தொல்லை அளிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து மனுவில் முறையாக விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.