சண்டிகர்: “அமைச்சர் மீதான வழக்கை மறந்துவிட்டு வெளிநாட்டிற்கு சென்றுவிட ரூ.1 கோடி தருவதாக கூறுகின்றனர்” என்று, ஹரியாணா விளையாட்டுத் துறை அமைச்சர் மீது பாலியல் புகார் தெரிவித்த பெண் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பெண் தடகளப் பயிற்சியாளர் ஒருவர், ஹரியாணா விளையாட்டு துறை அமைச்சராக இருந்த சந்தீப் சிங் மீது பாலியல் குற்றாச்சாட்டை முன்வைத்தார். இந்தநிலையில் அப்பெண் செவ்வாய் கிழமை சண்டிகர் போலீஸாரின் சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “எனது புகார் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் நடந்த அனைத்தையும் விவரமாக தெரிவித்தேன். இந்த விசாரணையில் ஹரியாணா முதல்வர் செல்வாக்கு செலுத்துகிறார்.
அமைதியாக இருக்க எனக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. நான் முதல்வரின் அறிக்கையை கேட்டேன். அவர் சந்தீப் சிங் பக்கம் இருப்பதாக தெரிகிறது. சண்டிகர் போலீஸாரிமிருந்து எந்த அழுத்தமும் வரவில்லை. ஆனால் ஹரியாணா போலீஸார் எனக்கு அழுத்தம் தருகின்றனர். நான் விரும்பும் எந்த நாட்டிற்கும் சென்று வசிக்க எனக்கு மாதம் ரூ.1 கோடி தருவதாக தொடர்ந்து தொலைபேசியில் அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன” என்றார்.
பயிற்சியாளரின் வழக்கறிஞர் திபன்ஷு பன்சால் கூறுகையில், “ஹரியாணா முதல்வர் இந்த சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தார். அவர்களிடம் அனைத்து விஷயங்களும் கூறப்பட்டுள்ளது. ஆனால் போலீஸார் சந்தீப் சிங்கை கைது செய்யவில்லை. இது ஜாமீனில் வெளியே வரமுடியாத வழக்கு. ஆனால் ஒரு முறை கூட அவர் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை ஆனால், பெண் பயிற்சியாளர் 4 முறை விசாரணைக்கு அழைக்கப்பட்டுவிட்டார்” என்று குற்றம்சாட்டினார்.
முன்னதாக, பாஜக ஆட்சி நடந்து வரும் ஹரியாணா மாநிலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த சந்தீப் சிங் மீது கடந்த டிசம்பர் மாதம் பெண் தடகளப் பயிற்சியாளர் ஒருவர் பாலியல் குற்றாச்சாட்டை முன்வைத்தார்.
அந்தப் பெண் பயிற்சியாளர், எதிர்க்கட்சியான இந்திய தேசிய லோக் தளம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து, அமைச்சர்ச ந்தீப் சிங்கின் பாலியல் அத்துமீறலைப் பகிரங்கப்படுத்தினார். “அமைச்சர் சந்தீப் சிங் முதலில் என்னை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டார். எனது விளையாட்டுச் சான்றிதழ் நிலுவையில் இருப்பதாகவும், இது தொடர்பாக நான் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் கூறினார். நான் மற்ற ஆவணங்களுடன் அமைச்சரை சந்திக்க, அவரது வீட்டுக்குச் சென்றேன். அப்போது அவர் பாலியல் ரீதியாக எல்லை மீறினார். தொடர்ந்து எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி, மிரட்டினார். கடந்த பிப்ரவரி முதல் நவம்பர் வரை என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் ஹரியாணா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சண்டிகர் காவல் துறையினர் சந்தீப் சிங் மீது நேற்று பாலியல் துன்புறுத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, சந்தீப் சிங் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.