ஒரு படம்.. மூன்று சூப்பர் ஸ்டார்ஸ்.. அதிரடி காட்ட தயாராகிறாரா நெல்சன்? ஜெயிலர் அப்டேட் இதோ

ரஜினிகாந்தின் 169வது படமாக உருவாகி வருகிறது ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கன்னட சினிமாவின் உச்ச நட்சத்திரத்தில் ஒருவரான சிவராஜ்குமார் வில்லனாக நடிக்கிறார்.

கடந்த டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் படக்குழு அவரது கதாப்பாத்திர பெயரை அதிரடியான BGM-யோட ப்ரோமோவை வெளியிட்டு சிறப்பித்தது படக்குழு. இதனையடுத்து முத்துவேல் பாண்டியன் பராக் பராக் என்றெல்லாம் ரஜினி ரசிகர்கள் பதிவிட்டு வந்தார்கள்.

ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, ரவீணா ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் ஷுட்டிங் வேலைகள் கடந்த டிசம்பர் மாதம் வரைக்கும் 65 சதவிகிதம் வரை முடிந்திருப்பதாகவும், அதில் ரஜினியின் காட்சிகள் மட்டுமே 75 சதவிகிதம் நிறைவுற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடங்கப்படும் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் நடக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதுபோக கூடிய விரைவில் படப்பிடிப்பு வேலைகளை முடித்துவிட்டு படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டை ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்துவதற்கான திட்டத்திலும் படக்குழு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படி ஜெயிலர் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வந்துள்ள நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் முக்கியமான தகவல்தான் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே சென்றடையச் செய்திருக்கிறது எனலாம்.

அதன்படி, ரஜினியின் ஜெயிலர் படத்தில் மலையாள சினிமாவின் மூத்த மற்றும் உச்ச நட்சத்திரமான மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம். அந்த காட்சிக்கான படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற இருக்கிறதாம். 

இந்த தகவல் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை உச்சத்துக்கே கொண்டு சென்றிருக்கிறது. ஏனெனில் தென்னிந்திய சினிமா உலகின் மிக முக்கியமான மூத்த நட்சத்திரங்களான ரஜினிகாந்த், சிவராஜ்குமார் மற்றும் மோகன்லான் மூவரும் ஒரே படத்தில் சங்கமிக்கும் நிகழ்வு இந்த நூற்றாண்டு ரசிகர்கள் காணாத ஒன்றாக இருக்கும் என்றே பரவலாக பேசப்பட்டு வருகிறது. விரைவில் ஜெயிலர் படம் குறித்த பல முக்கிய தகவல்களும் அதிகாரப்பூர்வாமக வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுபோக, நெல்சன் திலீப்குமாரின் சினிமா வாழ்க்கையின் முக்கியமான அங்கமாகவே இது இருக்கும் என்றும், ஒரே படத்தின் மூன்று மொழி திரை ஜாம்பவான்களையும் இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருப்பதால் இதனை அவர் சிறப்பாக கையாள வேண்டும் என்றும் ரசிகர்கள் பலரிடம் இருந்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.