புதுடெல்லி: விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக குற்றவாளியை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர். மேலும், அவரை பணியில் இருந்து அவரது நிறுவனம் நீக்கியுள்ளது. நியூயார்க்கில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ெடல்லி போலீசார் கூறுகையில், ‘விமானத்தில் தகாத முறையில் நடந்து கொண்ட சங்கர் மிஸ்ராவை பெங்களூருவில் கைது செய்துள்ளோம்.
அவர் மீது 294 (பொது இடத்தில் ஆபாசமான செயல்), 354 (ஒரு பெண்ணின் அடக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் தாக்குதல் அல்லது குற்றவியல் பலாத்காரம் செய்தல்), 509 (சொல், சைகை அல்லது செயல் ஆகியவற்றை அவமதிக்கும் நோக்கில் செய்தல்), 510 (குடிபோதையில் இருக்கும் நபர் பொது இடங்களில் தவறாக நடத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர். மேலும், அமெரிக்காவில் வெல்ஸ் பார்கோவால் நிறுவனம் சங்கர் மிஸ்ராவை பணி நீக்கம் செய்துள்ளது. கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட வெல்ஸ் பார்கோ நிறுவனத்தின் இந்திய வணிகப் பிரிவின் துணைத் தலைவராக சங்கர் மிஸ்ரா பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.