இமாச்சல பிரதேசத்தில் 7 அமைச்சர்கள் பதவியேற்பு: முன்னாள் முதல்வர் மகனுக்கும் வாய்ப்பு

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் இன்று நடந்த பதவியேற்பு விழாவில் 7 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் முன்னாள் முதல்வர் மகனுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த டிசம்பர் 11ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்வீந்தர் சிங் சுகு முதல்வராகவும், முகேஷ் அக்னிஹோத்ரி துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

அமைச்சரவையில் யார் யார்? சேர்ப்பது என்பது குறித்த சர்ச்சைகளும், விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்ததால், கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு பின் இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சிம்லாவில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோர் முன்னிலையில் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதன்படி மொத்தம் 7 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். அந்த பட்டியில்டாக்டர் தானி ராம் ஷண்டில், சந்தர் குமார், ஹர்ஷ்வர்தன் சவுகான், ஜகத் சிங் நேகி, ரோஹித் தாக்கூர், அனிருத் சிங் மற்றும் விக்ரமாதித்ய சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகனான விக்ரமாதித்ய சிங்கும் கேபினட் அமைச்சராக பதவியேற்றுள்ளார். இவர்களுக்கான இலாகா விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதியதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.