வடக்கு ரயில் பாதையில் மகோ – ஓமந்தை வரையான புனரமைப்பு செய்யும் நடவடிக்கைகள் இன்று (08) ஆரம்பமானது.
போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரின் தலைமையில் சர்வ மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை அளித்து, மதவாச்சி புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் சுப நேரத்தில் ஆரம்பமானது..
அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அங்கு உரையாற்றுகையில் ,வடக்கு கிழக்கு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்தியாவின் நிதி உதவியின் கீழ் ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரையில் செப்பணிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப்பகுதி ரயில் பாதையில் சிற்ப்பாக சேவை இடம்பெறுகிறது. இருப்பினும் மகோவில் இருந்து ஓமந்தை வரையிலான ரயில் பாதை 70 ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை.இந்த பாதையின் ஊடக ரயில் பயணிப்பது மிக சிரமமாகும் ரயில்கள் பாதையைவிட்டு தடம் புரளுதல் ,விபத்துக்கள் இடம்பெறுகின்றன.இதன் காரணமாக 3,300 கோடி ரூபா பெறுமதியான இந்திய கடன் உதவியின் கீழ் செப்பணிடும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகிறது. மதவாச்சியில் இருந்து அநுராதபுரம் வரையில் முழுமையான செப்பணிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தார்.
புனரமைப்பு பணிகள் காரணமாக இன்று (08) முதல் அநுராதபுரம் – வவுனியா ரயில் பாதை மூடப்படுகிறது.புனரமைப்பு பணிகள் 5 மாதங்களுக்கு இடம்பெறும் அனுராதபுரத்திற்கும் வவுனியாவிற்கும் இடையில் பஸ்கள் மூலம் பயணிகள் போக்குவரத்து சேவைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த ரயில் பாதை சீரமைப்புக்கான அபிவிருத்தித் திட்டம் கடந்த 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் காங்கேசன்துறையிலிருந்து கிளிநொச்சி வரையான ரயில் சேவை இக்காலங்களில் வவுனியா வரை நடைபெறும். கல்கிஸ்சை, கொழும்பு கோட்டையிலிருந்து வடக்கு நோக்கி புறப்படும் யாழ்.தேவி ரயில் உட்பட அனைத்து ரயில்களும் வழமை போன்று அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபடும்.
இந்திய அரச நிறுவனமான டெல்கொன் நிறுவனம் இந்நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளுகிறது. நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். இந்த அபிவிருத்திப் பணிகளால் ஏற்படும் சிரமங்களை பொறுத்துக் கொண்டால், எதிர்வரும் காலங்களில் சிறந்த ரயில் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இத்திட்டம் பூரணப்படுத்தப்பட்டதுடன் வடக்குக்கான ரயில்கள் சுமார் மணிக்கு 100 கிமீ முதல் 120 கிமீ வேகத்தில் வேகத்தில் பயணிக்கும்.
இதனால் ரயில் பயணிகள் எந்தவித தடங்களுமின்றி தமது பயணத்தை தொடர விசேட பஸ் சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும். அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரை பயணிப்பதற்காக, ரயில்வே திணைக்களம் விசேட பஸ் சேவைகளை ஏற்பாடு செய்துள்ளது.இதற்கான நேர அட்டவணையொன்றும் தயாரிக்கப்படும். இக்காலப் பகுதியில் வடக்குக்கான ரயில் சேவை அநுராதபுரம் வரை வழமை போன்று நடைபெறும்.
.