காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு பதிலடி தர கிராம பாதுகாப்பு படை அமைப்பு: எல்லையோர கிராமத்தினரை பாதுகாக்க ஒன்றிய அரசு நடவடிக்கை..!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் எதிர்தாக்குதல்கள் நடத்தும் விதமாக எல்லையோர கிராம மக்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ரஜவுரி மாவட்டத்தின் டாங்கிரி கிராமத்தில் அண்மையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்க பாதுகாப்பு படையினருக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து கிராம பாதுகாப்பு படை என்ற அமைப்பை உருவாக்கியுள்ள பாதுகாப்பு படையினர் ஆர்வமும், தகுதியும் உடைய கிராம இளைஞர்களுக்கு துப்பாக்கி பயிற்சி அளித்து வருகின்றனர். ரியாசி என்ற மலைப்பகுதியில் உள்ளூர் காவல்துறையினர் கிராம இளைஞர்களுக்கு துப்பாக்கி பயிற்சி அளித்து வருகின்றனர். பயிற்சிக்கு பின்பு அவர்களுக்கு துப்பாக்கி வழங்க உள்ள காஷ்மீர் காவல்துறையினர் எல்லையோர கிராமங்களுக்கு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் அவர்களை ஈடுபடுத்த உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.