இந்தாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஒன்பதாம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது திருவிடைமருதூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிசெழியன், நாச்சியார் கோவிலில் உள்ள ராமநாதசாமி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அரசு ஆவணம் செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “ராமநாதசாமி கோவிலில் இன்னும் மூன்று மாதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய கோவிசெழியன், பழனி முருகன் கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் சேகர்பாபு, “பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக பத்திரிக்கை முழுக்க, முழுக்க தமிழில் அச்சிடப்பட்டுள்ளது. அதேபோல், தமிழின் பெருமையை பறைசாற்றும் வகையில் 108 ஓதுவார்கள் வேத மத்திரங்களை முழங்க உள்ளனர்.
தமிழகத்தில் முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு ஓடாத தேரையெல்லாம் ஓட வைத்துள்ளார். திருவாரூர் தேரை ஓடவைத்த பெருமை தலைவர் கருணாநிதியை சேரும்.
அதேபோல், நமது முதலமைச்சர் திருத்தணியில் 12 ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேரையும், சமயபுரத்தில் 13 ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேரையும், ராமநாதபுரம் கோவிலில் 18 ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேரையும் ஓடவைத்து பெருமை சேர்த்தவர்” என்றுத் தெரிவித்தார்.