புனித கங்கையில் மதுபானம் வழங்கும் கப்பல்; அகிலேஷ் யாதவ் காட்டம்.!

இந்தியாவின் புனித நதியாக கருதப்படும் கங்கையில் உலகின் மிக நீண்ட கப்பல் பயணம் மேற்கொள்ளும் வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் வரை கப்பல் பயண சேவையை பிரதமர் மோடி கடந்த 13ம் தேதி துவக்கி வைத்தார்.

கப்பல் சேவையை காணொலி காட்சி வாயிலாக வாரணாசியில் இருந்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி, கப்பல் பயணிகளிடம் பேசுகையில், நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல விஷயங்களை இந்தியா கொண்டிருக்கிறது. இதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இந்த விஷயத்தை உங்கள் இதயத்தால் மட்டும் அனுபவிக்க முடியும் என்று தெரிவித்தார்.

முதல் பயணத்தில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 32 பயணிகள் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த பயணத்தின் மூலம் கிழக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்கள் உலகின் கவனத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள MV Ganga Vilas என்ற கப்பல் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. 51 நாட்களில் 3,200 கிலோமீட்டர் தூரம் பயணிக்கவுள்ளது.

இந்த கப்பலில் மொத்தம் 18 அறைகள் இருக்கின்றன. இதில் 36 பயணிகள் தங்கிக் கொள்ள முடியும். இதுதவிர கப்பல் ஊழியர்கள் 40 பேர் உடன் பயணிக்கின்றனர். இவர்களுக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 62 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அழகு நிலையம், சலூன், உடற்பயிற்சி கூடம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன

இந்த பயணத்திற்கான கட்டணம் தினசரி 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை ஆகும். ஒட்டுமொத்த பயணத்திற்கும் ஒரு நபருக்கு 20 லட்ச ரூபாய் வரை செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் வகையில் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கங்கை நதியில் கலக்காது.

மேலும் குளிப்பதற்கு மற்றும் பிற விஷயங்களுக்கு கங்கை நதி நீரை தூய்மைப்படுத்தி பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பயணத்தின் மூலம் 27 ஆறுகளை பார்க்கலாம். புகழ்பெற்ற பல்வேறு நகரங்களை கண்டு ரசிக்கலாம்.

குறிப்பாக பிகாரின் பாட்னா, ஜார்க்கண்டின் ஷாஹிகஞ்ச், மேற்குவங்கத்தின் கொல்கத்தா, வங்கதேசத்தின் டாக்கா, அசாமின் கவுகாத்தி ஆகியவை வழியாக கப்பல் பயணிக்கிறது. குறிப்பாக வெளிநாட்டு மக்கள் இந்தியா மற்றும் வங்கதேசத்தின் கலை, கலாச்சாரம், வரலாறு, ஆன்மீகம் ஆகியவற்றை அனுபவிக்கும் வகையில் இந்த கப்பல் பயணம் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் புனித கங்கை நதியில் சாராயம் விற்கும் கப்பலா என சமாஜ்வாடி கட்சி தலைவர்
அகிலேஷ் யாதவ்
கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘இந்த ஆற்றுப்பயணம் பல வருடங்களாக ஓடுகிறது, இது புதிதல்ல, கடந்த 17 வருடங்களாக ஓடுகிறது என்று யாரோ தெரிவித்துள்ளனர்.

பாஜகவினர் அதில் ஒரு பகுதியை மட்டும் சேர்த்து, நாங்கள் தான் தொடங்கினோம் என்று கூறிவருகின்றனர். பிரச்சாரம் செய்வதிலும், பொய் சொல்வதிலும் பாஜக மிகவும் முன்னிலையில் உள்ளது. புனித நதியான கங்கையில் கப்பலில் பயணம் செய்வது மட்டுமின்றி, மதுபானம் வழங்கும் பார்களும் உண்டு என்றும் கேள்விப்பட்டேன்.

தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்கனவே உள்ள விஷயங்களை பாஜக மீண்டும் துவக்கி வருகிறது. சமீப காலம் வரை, நாங்கள் கங்கையில் ஆரத்தி பார்பதுடன், அங்கே அமர்ந்து பக்திக்கான பொருட்களைக் கேட்போம். நாங்கள் கங்கையில் படகு சவாரி செல்லும் போதெல்லாம், இது ஒரு மத ஸ்தலமாக இருப்பதால் எங்களால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதை மக்கள் விளக்குகிறார்கள்.

கல்வி துறைக்கு திடீர் உத்தரவு..மாணவர்கள் ஹேப்பி; அரசு அதிரடி!

பாஜககாரர்களால் தான் இப்போது கப்பலில் பார் இருக்கிறதா என்று சொல்ல முடியும். நாங்கள் இன்னும் அதில் நுழையவில்லை. மத ஸ்தலங்களை சுற்றுலா தலமாக்கி பணம் சம்பாதிக்கும் பாஜகவின் கொள்கை கண்டிக்கத்தக்கது. உலகெங்கிலும் உள்ள மக்கள் காசியின் ஆன்மிகச் சிறப்பை அனுபவிக்க வருகிறார்கள், ஆடம்பரத்திற்காக அல்ல’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.