விஜய், அஜித் படங்கள் இனி ஒரே நேரத்தில் வெளியாகக் கூடாது.. அரசுக்கு கோரிக்கை..!

விஜய், அஜித் நடிக்கும் திரைப்படங்கள் இனி ஒரே நேரத்தில் வெளியாகக் கூடாது என்று திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நாயகனாக நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படமும், வம்சி இயக்கத்தில், விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் ‘வாரிசு’ திரைப்படமும் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘துணிவு’ திரைப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ‘வாரிசு’ திரைப்படம் குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இரு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சூழலில், ‘வாரிசு’ திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல், ‘துணிவு’ திரைப்படம் வெளியான முதல் நாள் தமிழகம் முழுவதும் ரூ.24.59 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், உட்லண்ட்ஸ் திரையரங்க உரிமையாளர் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நடிகர்கள் விஜய், அஜித் திரைப்படங்கள் இனி ஒரே நேரத்தில் வெளியாகக் கூடாது. நள்ளிரவு 1 மணி, அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகளை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.